Pages

இன்பம் தரும் இஸ்திஃபார்




 


அஸ்ஸலாமு அலைக்கும்! (வரஹ்) 

           நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'மனிதர்கள் அனைவரும் குற்றம் புரிபவர்களே! குற்றம் புரிவோரில் சிறந்தவர் அதிக பாவ மன்னிப்பு கோருபவரே!’ ஆவார்.
           இன்றைய நாகரீக உலகில் மனிதனுக்கு மனிதன் சிறு தவறு இழைத்து விட்டால் கூட உடனுக்குடன் ஸாரி வருந்துகிறேன் என்று சொல்லி விடுகின்றோம். சிலர் தப்புக்கு மனம் பொருத்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல் வழக்கமுண்டு. இப்படி சொல்வதனால் அந்த தவறின் மூலம் மன வருத்தங்களை அல்லது வேதனையை மறந்து விடுவதை அன்றாடம் பார்க்கிறோம். நற்பண்புகளில் ஒன்றாக தவறுக்கு வருந்தும் பழக்கத்தை கருதுவதால்தான் சிறு பிள்ளைகளுக்கும் அதனை கற்றுக் கொடுக்கிறோம்.
           மனிதன் சக மனிதனிடம் மன்னிப்பு கேட்பதையே இவ்வளவு உயர்வாக கருதும்போது இறைக்கட்டளைகளை  சரிவர நிறைவேற்றாமலும், இறைவனால் விளக்கப்பட்ட செயல்களை செய்யும்போதும் இறை கோபத்திற்கு ஆளாக நேரிடுவதை உணர்ந்து , பயந்து பாவமன்னிப்பு கேட்பது எவ்வளவு முக்கியமானது என்பதை சிந்தித்துணர வேண்டும்.
           மனிதர்கள் எல்லோரும் குற்றம் புரிபவர்களே. செய்த குற்றம் பிற மனிதர்களின் உரிமை தொடர்பானதாக இருந்தால் பாதிக்கப் பட்டவருக்கு பரிகாரம் வழங்குவதன் மூலம் அந்த பாவத்திற்கு பரிகாரம் தேடி விடலாம். செய்த பாவம் இறைவன் தொடர்பானதாக இருந்தால் உள்ளம் நெகிழ இறைவனிடம் பாவ மன்னிப்பு கோர வேண்டும் என்பதே அல்குர்ஆன் கூறும் வழிமுறையாகும்.

 وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ  


ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا


 4:110. எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் - அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.
           அண்ணலார் கூறினார்கள், முஃமின்களே! அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருங்கள். ஏனெனில் நான் ஒவ்வொரு நாளும் இறைவனிடம் நூறு முறை பாவமன்னிப்புக் கோருகிறேன், என்று முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நம் நபிகளார் சொன்னார்கள்.
           இன்னும் சைய்யிதுனா இப்ராஹிம் (அலை) அவர்கள் தனது மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் சேர்த்துக் கொண்டு இறை உத்தரவுக்கிணங்க இறை ஆலயத்தை (கஃபா) கட்டி முடித்தவுடன் இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரினார்கள் என்கிறது அல்குர்ஆன். (2;128)
           இதன் அடிப்படையில் நாம் செயல் படுத்திவரும் கடமையான தொழுகை, அருள்மிகு நோன்பு, அன்பு மிகைக்கும் ஜகாத், ஆழமான ஈமானைக் கொடுக்கும் ஹஜ் போன்ற உயர்வான இபாதத்துகள் மற்றும் உபரியான தராவீஹ், தஹஜ்ஜுத் போன்ற நபில் வணக்கங்கள் புரிந்தாலும் நாம் அறியா வண்ணம் குறைகள் ஏற்பட்டு இருக்கும். அக்குறைகளைக் கண்டு கொள்ளாமல் பூரணமான நற்கூலியை இறைவன் வழங்குவதற்கு உயர்ந்தோன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருவது அவசியம்தானே! அதிலும் புனிதமிக்க ரமலான் மாதத்தில் கேட்கப்படும் பாவ மன்னிப்பு உடனுக்குடன் மன்னிக்கப் படும்பொழுது இவ்வருள் ரமலானின் புனித நாட்களில் அதிகமதிகம் இஸ்திஃபார் ஓதுவோமாக!
யா அர்ஹமர் ராஹிமீன்
எங்கள் பிழை பொறுத்து
எங்கள் இபாதத்துகளை கபூல்
செய்வாயாக! ஆமீன்!

நோன்பின் மான்பு





அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும்!
           ஆரம்பமும் முடிவும் இல்லா இறைவன் அல்லாஹ் ஜல்ல ஜலாலுஹு தன்னுடைய கோடானு கோடி படைப்புகளில் ஆச்சர்யமான, அபூர்வமான பல பல படைப்புகளைப் படைத்துள்ளான்.
           அப்படைப்புகளில் மனிதனை தன்னுடைய பிரதிநிதியாக தேர்ந்தெடுத்துள்ளான். கலீபா என்ற மகத்தான பதவியுள்ள மனிதனுக்கு அனைத்து செயல்களும் சொல்லிக் கொடுக்க, பயிற்சி கொடுக்க வேண்டியுள்ளது.
           மற்ற உயிரினங்கள் தன் தாயின் வயிற்றிலிருந்து வெளியானவுடன் தானாக எழுந்து, நடந்து தன் தாயிடம் மடியில் முட்டி தானாக பால் குடிக்கும்.
           ஆனால், ஆறு அறிவுள்ள உயர்வான மனிதனுக்கு தன் தாயின் மார்பில் எப்படி சுவைத்து பால் குடிக்க வேண்டும் என்பது முதல் நடப்பது, பேசுவது, தூங்குவது என்று ஒவ்வொரு அசைவுக்கும் பயிற்சி கொடுக்கவேண்டியுள்ளது.
           பலம் மிக்க வனவிலங்குகள், வண்ண வண்ண பறவைகள், அழகழகான நீரினங்கள் என்று மனிதன் வியக்கும் இறைவனின் படைப்புகள் பல பல. இவைகளில் மனித இனத்தை உயர்ந்த படைப்பு என்று அல்லாஹ் அறிவித்து விட்டான்.
           இவ்வுயர்ந்த படைப்புக்கு இறையச்சம், இறைவழிபாடு, இறைக்கட்டுப்பாடு என்று பலவித பயிற்சிகள் கொடுக்க வேண்டியுள்ளது.
           உலக நடைமுறையில் இராணுவ அதிகாரி முதல் சின்ன சின்ன தொழில் துறைகள் வரை அந்த அந்த வேலைக்குத் தகுந்த பயிற்சி தேவை படுகிறது. சில வரைமுறைகளோடு பயிற்சி செய்தால்தான் வேலையும் கிடைக்கும்.
           ஆரம்பம் இல்லா அல்லாஹ்வின் பிரதிநிதியிடம் அல்லாஹ்வின் உயர் குணங்கள் பிரதிபலிக்க வேண்டும். முடிவில்லா அல்லாஹ்வின் குணங்கள் அமைய மனிதன் வாழ்கையில் எடுக்கும் பயிற்சி காலம்தான் ரமலான் மாதம்.
           ரமலான் என்ற புனித மாதத்தில் நோன்பு இருந்து உள்ளத்திற்கு பயிற்சி கொடுக்க வேண்டும். அண்ணல் நபி (ஸல்) கூறினார்கள்…..
           இளைஞர்களே! உங்களில் திருமணம் செய்து கொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், நோன்பு
(ஆசையை) கட்டுப் படுத்தக்கூடியதாகும். (புஹாரி)
           நோன்பு என்ற செயல் மனிதனின் அற்பமான சிந்தனைகள், செயல்கள் அனைத்திற்கும் அணைபோட்டு சிறந்த சிந்தனைகளை கொடுக்கிறது. மனிதனை மகத்தான செயல்களைச் செய்ய வைக்கின்றது.
நோன்பினால் என்ன பயன்?
அல்லாஹ்வின் அருள் மறை இரண்டு வார்த்தையில் சொல்லிவிட்டது,
لعلّكم تتّقون  
(இதனால்)"நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்"
( 2;183) என்று அல்லாஹ் தெரிவித்துள்ளான்.
அதோடு பயிற்சியில் எல்லோரும் வெற்றி பெருவதில்லை என்பதையும் لعلّكم – நீங்கள் ஆகலாம் என்ற இடம்பாடான சொல்லை பயன்படுத்தியுள்ளான்.
           வாழும் வாழ்க்கையில் இறையச்சம் இருந்துவிட்டால் இறைவனின் திருக்குணங்கள் மனித வாழ்வில் மணக்கும்.
           மணமான, மான்பான வாழ்க்கைக்கு இப்புனித ரமலானில் பயிற்சி கொண்டு வாழும் காலமெல்லாம் இறையச்சம் மிகுந்த வாழ்க்கையாக அமைத்துக்கொள்ள மனப் பயிற்சி செய்து கொள்ள வேண்டும். இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் நம்மை அழகிய பிரதிநிதியாக ஏற்றுக்கொள்வான்.
           இப்புனித ரமலானின் அனைத்து அருளையும் நம் அனைவருக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக! ஆமீன்!
 
Download this Blogger Template From Coolbthemes.com